Sep 5, 2013

பைந்தமிழ்ப் பயிர்த்து



புற்றீசல்போல்
பல்கிப்பல்கிப்பெருகிப் 
பரிணமிக்கும்
சில தமிழ்இலக்கிய 
வியாதிகள்!
விரசமாய் விடவித்துக்களை 
விதைக்கும் 
தமிழ்இலக்கிய 
வியாதிகள் - அவ்வாறே
சமீபத்திய வரவென
சில படைப்பாளிகள்
தமிழ்ச்சோலையில் 
எங்குகாணினும்
அவர்தம் எடுத்தவாந்திகள்!

ஆம், அங்கிங்கெனாதபடி
எங்கெங்கிலும்
வீர்யம் நீர்த்துப்போன
நொள்ளைச்சந்ததிகளாய்
சவலைக்குழந்தைகளாய்ப்பிறந்த
இதுகள்தான்
செந்தமிழ் அழிக்கும் 
சாத்தான்கள்.

அருந்தமிழ் மத்தினைத்துறந்து
சல்லிக்கற்களைக்கொண்டு 
தமிழ்ப்பாற்கடலிலிருந்து 
அமிர்தம்தனை கறந்திடத்துடிக்கும்
போலி இலக்கியநச்சினை 

நம் மனத்தினுள் 
புகுத்திடத்துடிக்கும் 
தமிழ்க்கொலைஞர்களின்
கலிகாலம் இது
அய்யகோ –
கலிகாலம் இது!

எம்மொழிச்சத்து - நீர்த்துப்போய்
தமிழ்தம் வீர்யம்
குறைகுறையென
குறையாதிருக்க
அருந்தமிழ்ச்சூல் தரித்
நற்றமிழ் இலக்கியங்கள் –
தமிழ்அகமெங்கிலும் 
பிறக்கக்கடவதாக!

அங்கனமே
தமிழ்கூறும் யுகமெங்கிலும்-
செவ்வனே இப்பைந்தமிழைப்
பயிர்த்திருப்பதாக! பயிர்த்திருப்பதாக!!
நம்மனச்செழுமைஏற்றும்
தமிழ்ப்படைப்பாளிகள் - அவர்தம்படைப்புக்கள்
இம்மானுடம் உள்ளவரை
உயிர்த்திருப்பதாக! உயிர்த்திருப்பதாக!!