Sep 23, 2006

மரணிக்கத்தெரிந்தவன்




நீர் அருந்தும

நீர் இருந்தும் - நீந்தமுடியா

மீன் அவனே


.

தேன் எனவிருந்தும்

தேனிருந்தும்

தேற்றவியலா

வண்ணத்துபூச்சியானவன் அவனே

.

சிறகு இருந்தும்

சிறகென உருவமிருந்தும்

பறக்கவியலா சிறு

பறவை அவனே

.

வெளிதனில் தவழ்ந்தும்

ஒளியினையுண்டும்

காணவியலாக் காட்சி்

அவன்

.

காற்றில் பிறந்தும்

காற்றிருந்தும்

சுவாசம் தொலைத்த

அபலை அவனே

.

நினைவாய் இருந்தும்

நினவினைச்சுகித்தும்

நிந்திக்கத்தெரியாதவன்

அவன்

.



உணர விருந்தும்

உணர்விருந்தும்

உண்மை தொலைத்த

பேதையவனே

.

இறையே

நீ அவனுக்கு

ஒளி யளித்தாய்

அவனோ

அதை இருள் -

வெளியினில் தொலைத்தான்

அவனும்

இருளெனத் தொலைந்தான்

.

நீ

அவனுக்குத்தாய் -

உயிரெனச் சுகித்தாய்

அவனோ

மரணத்தை

துணைக்கழைத்திருந்தான்

அதனையே

மணந்திருந்தான்

அதனுள்ளே

என்றென்றும் உறைந்தான்

.

செந்தில்குமாரன்

Sep 19, 2006

மன அழகு

நிரந்தரமாவதில்லை

பனித்துளி

புல்லின் மீதுறங்கும்

அதிகாலைப்பனித்துளி


மலர்வதில்லை

தடாகத்தாமரை

இரவு நெடுகிலும்

மொட்டவிழாதா மரை



வீசுவதில்லை

சுள்ளென்ற சூரிய ஒளி

முகில்களினூடே முக்காடிட்ட ஆதவன்

Sep 18, 2006

உள்ளூரத்தேடிய உணர்வுகள்





இப்போதெல்லாம்

உள்ளிருக்கும் உயிர்வரை

உற்று -

இயல்பு சிறிதும் பிறழாமலே

உற்று உற்று

நோக்கிடினும்

உண்மைகள்

புரிவதில்லை



என் மனவெளியின்

ஒற்றையடிப்பாதையில்

ஓராயிரம்

ஆண்டுகளாய் பயணித்தும் - மன

வெளிச்சம் காண இயலவில்லை



அருந்துகிற நீர்

நிச்சலனத்தினூடேயும

நித்தமும்

நித்திரைத் தருணங்களிலூடேயினும்

என்னுடம்பில் - ஒட்டுவதில்லை



என் சுவாசக்காற்று

என்னுள் - சுதந்திரமாக

சுற்றுத்திரிந்திடினும்

உயிரை உண்மையோடு

உரசுவதில்லை



கண்ணிமை கூட

அதன் உள்ளூரத் -

தூங்காதென் கண்களை

தொட்டுத்தழுவுவதில்லை



ஆன்மாவின் ஆதிக்கமற்ற

அந்தரங்கங்களை

என் சிந்தையெங்கிலும்

சேதாரத்தோடு சிந்திய -

மிச்சங்களாகக்கூட

சேமிக்க முடியவில்லை



எனக்குள்ளே - எங்கெங்கு

நோக்கினும்

எட்டுத்திசை எழுகடலென்று

உள்ளூரத்தொலைந்து

உன்மத்தம் பிறழ்ந்து

திரிந்திடினும்

நான் யாரென்ற

நமத்துப்போன நிந்தனைகள்

எனக்கே புரிவதில்லை

தொலைந்த இயல்புகள்




ஓ வண்ணத்துப்பூச்சிகளே

உங்கள் உற்சாகத்தை

என்றென்றும்

இழந்து விடாதீர்கள்



ஓ மலர்களே

உங்கள் நிறங்க்ளை

தொலைத்து விட

எப்பொழுதும்

சம்மதித்து விடாதீர்கள்



ஓ தென்றலே

உங்களிக்குள்ளிருக்கும்

உன்னதத்தினை

எவ விடத்துமிழக்க

சம்மதித்து விடாதீர்


ஓ சிட்டுக்குருவிகளே

உங்கள் சிறகு

சுதந்திரங்களை

எந்நிலையிலும்

பலவீனமாக்கி விடாதீர்கள்


ஓ இனிய பறவைகளே..

உங்களின்பத்தினை

எங்கும்

இழந்து விடத் துணியாதீர்


ஓ அணில் குஞ்சுகளே

உங்கள் தூதுகலத்தினை

என்றென்றும்

துச்சமாக எண்ணி

விட வேண்டாம்



ஓ இயற்கையன்னையே

உன் ஏழிலழகை

ஊமையாக்கி விடாதே



ஏனெனில்

மனிதன்

................

................

................

................

................

Sep 10, 2006

குருட்டுப்பார்வை




என் கண்கள்

எதையும் கண்டதில்லை

எத்திசையும்

காண்பதேயில்லை

வண்ணங்களில்

சிறைப்பட்டுக்கொண்டதில்லை

வடிவங்களால்

வரையரை யானதில்லை

ஒளியினில்

மயங்கியதில்லை



எவையெல்லாம்

எப்பிடியெப்பிடியெல்லாம்

இருக்குமோ

என்றெண்ணியதில்லை

ஒளி பிரிந்த, தொலைந்த -

அதன்

உருக்குலைந்த ஓசை

நான்

நித்தம்

கேட்பதினால் - நிழல்

படரபயணம் செய்ததில்லை



கடல், இருட்கடல் முழுகி

முத்துக்குளிப்பினும்

கிடைப்பதென்னவோ

கருமுத்து

சிறிதும்

ஒளியில்லா முத்து



என் மனப்பிரபஞ்சத்தில்

ஒளிச்சூரியன்

தினமும்

இறந்தே பிறந்தான் - மறுபடியும்

பிறந்தாலும் இறந்தான்

இருட்சூரியனோ

இறந்தாலும் பிறந்தான் - பின்

இறப்பையே தொலைத்தான்

அதனால்தான்

நான் இருளை

இருளில்

சுவாசிப்பவன் -




என் மனப்பச்சையம் ஒளியில்லா சுவாசத்தில்

அச் சுகமில்லா வாசத்தில் -

உயிரில்லா ஜீவிதம்

அஜ்ஜீவிதததின் கண்களிலோ

வண்ணாமில்லா வாழ்க்கை

வறண்டுபோன வயற்காடு

வெளிச்சமில்லா இடுகாடு




இருப்பினும் செப்பிடுவேன்

ஊன் உறுதியோடு

உள சுருதியோடு

என் மனது

வணண்மயமான தென்று

எச்சூரியனையும்

சுட்டெரிக்குமென்று

வண்ணத்துப்பூச்சியானதென் மனம்





வண்ணத்துப்பூச்சியின்

வண்ணத்தினுள்ளே

உறைந்துதொ லைந்திருந்த என் மனம்

அன்றொரு நாள்

என் விழிகள்தனை

மற்றுமொருமுறை

தானமாக கேட்டது

அய்யகோ

நான் இம்முறைஎன் செய்குவேன்

விழிகள் தான்

எப்பொழுதோ ஒருமுறை

வண்ணத்தினுள்ளே

தொலைந்து விட்டதே



இம்முறை

என்மனப்பிரபஞ்சத்தில் மொளனவீச்சாய்

விரவியிருந்த

மதியென்னும் மாயவலைகளை

ஒன்றிணத்து

விழிகளுக்கு -

அதன் மொழிகளுக்கு

பதிலீடு செய்திருந்தேன்



இப்போதெல்லாம்

தினமும்

கனவுச்சோலைதனில்

வண்ணத்துப்பூச்சிகளை காண்கிறேன்


ஆனால்

அதன்

வண்ணங்களை

காண முடிவதில்லை


என் மன

எண்ணங்களை

காண முடிவதில்லை

Sep 9, 2006

மழலைக்காதல்




தோள் தொட்டுத்தூக்கி

உச்சி முகர்ந்து

உன் குறும்புக்கண்களை

கொஞ்சுகொஞ் சென்று

கொஞ்சநேரம்கா தலித்து

உன்னதரப்புன்ன கையை

அப்படிஅப்பிடியே இரசிக்க

அய்யகோ

எனை நானிழந்தேன்

.

என் கேசம் கலைத்து

காது மடல் வருடி

கன்னம் குழைத்து

முத்தத்தால் மூழ்கியெடுத்து

உன் பிஞ்சுப்பாதங்கள் என் நெஞ்சினை தாக்க

கொஞ்சி மகிழுமுனக்கு

என் நெஞ்சம் உன் மஞசமடா...கண்ணே...

.

கொஞ்சு மொழிகள் உணர்வாய்

கெஞ்சித் தவழும்

அருட்பார்வை அளிப்பாய்

விரல் பிடித்து வீதிதனில்

நடை பயில

இறைவனையே துணைக்கழைப்பாய்


.
என் மனக்கள்ளனே

என்னையே திருடியவனே

உன் மழலை சிரிப்புக்கு

இந்தப்பரபஞ்சத்தையே

தானமளிக்கிறேன்

.


கிள்ளை மொழி மிழற்றி

கொஞ்சு நடைபயின்று

எனை அள்ளிக்கொண்டு

போனதுன் உள்ளம் - மனக்கள்ளம்

.


இத்தனை காலங்களிலும்

எததனை தூரங்களிலும் -

என் மனத்தோடு ஒட்டிய

தொலைதூரச் சுவடுகளிலும்

இப்பொழுதும்

உன்னைத்தவிர

வேறு எவருமில்லை

.

இறை

.

இப்பி ரபஞ்சத்தில்

அங்கிங்கெ னாதபடி விரவி ஒவ்வொரு

அணுவிலும் அணுவாகி

ஆகாச வெளியினுள் வியாபித்து

கோடானுகோடி சூரியன்களை

அத்துணை கோள்களை

அண்ட வெளியிள்

அகண்ட பிரபஞ்சத்தில்

பரப்பி

நம் அத்துணை

ஜீவனிலும் ஜீவனாகி - ஜீனாகி

நம் ஒவ்வொரு பிரேத

செல்லிலும் செயலாகி

உன்றன் -

உயிரணுவினுள்ளும் உயிர்த்தெழுந்து

உன் ஊனுக்குமுயிர் தந்து

உன்னையே உருவகித்து

ஆதர்சனமான சக்தியாகிய

இறை

இப்புவிதனில்

மானிடமாக மட்டும்

உருவு கொண்டதென்ற மாயை

நம் மன வெளிதனில் படர

மானிடனே - நீயே

காரணம்



இப்பிரபஞசத்தில்

எங்கெங்கினும் - இறை

உன்னிலும், என்னிலும்

சக மனிதனும் இறை

சமத்துவமே இறை

அன்பே இறை

.

அவ்விறை மறந்து

மானிடன் கற்பனைவடித்த

இதுகாறும் கதைத்த

இம்மாயையே கிருஷ்ணனனையே

கிருத்துவையே

முஹம்மதுவையே

இறையென்று

உணரும் உன்மனம்

விநோதம் - இப்பிரபஞ்ச உண்மைக்கு

விரோ தம்


முப்பத்துமுக்கோடி தேவர்களும்

எம்மதத்து கடவுளரும்

மானுடவடி வில்

உயிர்த்தெழுவ

இறையென்ற இறவா

வரம் பெற்றனரோ

யாரிடமோ எங்கிருந்தோ

யாமறியோம் பராபரமே



அவர்களையும் படைத்தவன்

ஒருவன் இருப்பனெனில் அவன்

எவனோ

அவன் தான் எப்பிடிப்

பிறந்தானோ


.


இதுகாறும்

நீ கண்ணாறக் கண்டிட

எத்தேவனும்

கிஞ்சித்தும்

இசைந்ததில்லை


அய்யகோ

அத்துணை தேவர்களும்

எப்பழியில்லா பிஞ்சுக்குழந்தைக்கும்

அருட் பாலிக்காத

நெஞ்சு படைத்தவரோ

.

நீ வடித்த இவ்விறை... இதுகாறும்

உன்னிடத்து வந்தது ண்டா.....

நீயுன்

கண்ணால் கண்டதுதா னுண்டா

படைப்பு நோக்கா

படைப்பாளியென்றுன்

இறையிருப்பின்

படைப்பாளி அடையா முக்தி யிலா

தென்று நீ உனையே

தொலைப்பதென்பது

இப்பிரபஞத்தின் விநோத மாயை

இம்மாயை மானிடர்

எழுச்சிக்கு இடர்

அது

என்று தீருமோ, சிந்தை சிறக்குமோ


உன் கைக்காசு

உண்டியலில் - போட்டு

உலகத்தினை கட்டியாளும்

இறையிடத்தில் இறைஞ்சி

கோடானு கோரிக்கைகள்

நித்தம்..

இது உன் இறையை

உன்னிடத்து கிஞ்சித்தும்

கொண்டு சேரா தென்று

அறியாதது

உன் பித்தம்


.


இறையை

உன்னுள் தொலைத்து

இறைவனை, எங்கெங்கோ

தேடித் தொலைக்கிறாய்

உன்னையே, உண்மையையே

இழக்கிறாய்




இதை

உணர்ந்தும் உணரா

இந்நிலை, தன்னிலை கெட்ட

மானுடர்தம் மனம் கண்டு

நெஞ்சு பொருக்குதில்லையே எம்

நெஞ்சு பொறுக்குதில்லையே

.


இம்மாயையே இறையென்று

பொய்யதனை பாரினில் பரப்பி

மதம் என்ற பெயரில்

செப்புவரே

அம்மறை

கழன்ற மானிடர்

கூற்றிய குறைகொண்ட

கூற்றிலக்கியங்கள்


மனமெனும் பாலில்

நம்மனப்பாலில்

விரவியிருக்கும் விஷமென்பேன்

இந்நஞ்சு கண்டு எந்நெஞ்சு

பொருக்குதில்லையே

எந்நெஞ்சு பொருக்கு தில்லையே

.

Sep 6, 2006

நிஜமான நிஜம்




நேற்றிரவு ஓர் கனா கண்டேன்

நிஜமாகவே நிஜமில்லாத ஒரு கனா...

உருவமில்லா ஒரு உருவம் –

தெளிவான ஆன்மாவோடு

உரையாடிது....

நான் அதனிடத்தில் வினா எழுப்பினேன்

பதில்கள் பக்குவமாக...பாங்காக...அங்கிருந்து

நீ யார் ? , என்று வினவினேன்

நான் நானில்லை! என்றது..அது

எங்கிருந்து வருகிறாய்.??? ..நான்

உண்மையிலிருந்து!...என்று இயம்பியது...

நான் ஏன் பிறந்தேன் ? என்று மதிக்குழப்பத்தினிடையே - என் கேள்வி..

இறப்பதற்காக !!!

பிறப்பது இறப்பதற்கெனில் - இறப்பது பிறப்பதெற்கெனில் - இடையில் வாழ்வதெற்கு...

வாழ்வது வாழ்விழப்பதெற்கு ! - என்றது மொளனமாக

கடவுள் எங்கே ? _ நான்


உனக்குள்! _ அது

நீ அழிந்து விடுவாயா ! - வினையமுடன் வினவினேன்...

உருவால்தானே அழிவதெற்கு !

நான் என்பது எதுவரை ?

இறையை அடையும் வரை !!

உயிர் எங்கே ??? உயிர்த்துடிப்புடன் என் கேள்வி..

உனக்குள் எங்கும் உயிர்...ஒவ்வோர் அங்கத்திலும் ...உயிர் வீச்சாய் பதில் அங்கிருந்து

பிரபஞத்துடன் கலப்பதெப்போது? இது நான்

நான் என்பதை ஒழித்து...! அதன் பதில்

ஞானம் பெருவது எபபடி ??? ஞானக்குழப்பத்தினிடையே நான்

பதில் செப்பாது என்னிடத்தில் எதிர் கேள்வி வீசியது...

நீ யார்...???

யுக யுகமாய் சிந்தித்து பார்த்தேன்...

நான் யார்,,,,. நான் யார்

பதில் வரவில்லை எனக்குள்

கேள்வியை கேள்விப்பட்டதே யில்லையோ... ??

ஒரு வேளை பதிலோ இல்லையோ... ????

அதனிடத்திலே தஞ்சமடைந்தேன்...

நீ யார் என்று அறியாத வரை_ ஞானம் பெற வழியில்லை...


இறை என்பது என்ன ? என் கேள்வி

இறை என்பது இருளானது...ஒளியானது...இரண்டும் கலந்தது...இரண்டும் இல்லாதது...எதுவுமானது.....எதுவுமில்லாதது...எல்லாமுமானது...முடிவில்லாதது.....என்றது ஆன்மா

அயர்ச்சியுடன்...முடித்து விடலாமா ? என்றேன்...

ஆரம்பித்தால்தானே முடிப்பதற்கு!!! என்றது மெதுவாக...

அந்த திடுக்கிடலுடன் என் கனவு கலைந்தது....

கனவு என்பது நிஜமில்லாத நிஜம்

ஆனால் நான் கண்ட கனா

நிஜமான நிஜம்...


செந்தில் குமாரன்

Nov 20, 2005

மானுடம்.....




மனங்களை மானுடர்கள்

எங்கெங்கோ எதற்காகவோ

தொலைந் தெறித்து விட்டார்கள - பாவம்

மானுடத் தன்மையும், மானுடத் துண்மையும்

மனித சீவராசிகளால் -

யுக யுகங்களாக உருக் குலைந்து உரு தொலைந்து விட்டதே......!!!

அற்றொழிந்த மானுடர்களே - தாங்கள்

ஆற்று நீரில் அடித்து செல்லப்படுவதை

அவ்வப்போது கூட உணர்வதில்லையா....

அய்யகோ...

எங்கே, எதற்கு, ஏன்

கொண்டு செல்லப்படுகிறோம்- என்று அறியாப பிண்டங்கள்

ஓட்டைச் சடலம், உப்பில்லா பாண்டம்

என்றெவனோ- பாடித்

தொலைத்ததை

உண்மையாக்கும் ஈனப்பிறவிகள்...

என் மானுட மன்னர்களே... கனவான்களே! - நீங்கள்

காரல் மார்க்ஸினை அறிந்ததுண்டா

டால்ச்டாயின் தத்துவ நெறியை மேய்ந்த துண்டா.... ?

நிகொலாச்கோயின் இடர்பாடுகளை உணர்ந்ததுண்டா - லெனினின்

சமத்துவ புரட்சிகளுடன் புரட்சி செய்ததுண்டா....

தாகோரின் கவிதாஞ்சலியில் முத்தெடுத்தது உண்டா...

பாரதியை உரசியதுண்டா....நீட்சேயினை நிந்தித்ததுண்டா...

ஷெல்லியின் வரிகளை சுவாசித்ததுண்டா......ஷேக்ஷ்பியரினுள் சென்றது உண்டா...

வேர்ட்ஸ்வெர்த்திடம் விளையாடி யதுண்டா....

புத்தனை புரிந்ததுண்டா....புதுமைப்- புத்தனை புரட்டியதுண்டா.....

ஜெயகாந்தனை...ஜெகத்தினை... அளாவளாவியது உண்டா....

ஒஷோவின் உயர்த்த சிந்தனைகளை உண்ர்ந்ததுண்டா...

ஜென் துற வறங்களை ஒரளவு உரசியதுண்டா....

ஆரோக்கியமான சிந்தனைகளிலாவது வலம் வந்ததுண்டா.....

நீங்கள் பிறக்கிறீர்கள் . என்ன வென்று உணராமலே....

நீங்கள் வளர்கிறீர்கள்.....எப்படி யென்று தெரியாமலே....

பின்

இறந்து விடுகிறீர்கள்....எதற் கென்று புரியாமலே....

மானிட்ர்களே வாழ்வை, அதன் பிரபஞ்ச உண்மையை,

அறிந்து புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள்....

இயற்கையின் இறையை - இரசிக்கக்

கற்றுக்கொள்ளுங்கள்....

அன்பே இறையென்றுணருங்கள்


இதெல்லாம் முடியா விடில் ......

இன்றைக்கே......

இறந்து விடுங்கள்....

- செந்தில் குமாரன்