ஆசிரியர்கள் பலர்
புத்தி சொல்லியும்
நன்னெறி நூல்கள்
நலம்பட உரைத்தும்
நல்லோர் பலப்பல காலம்
பகுத்தறிவூட்டியும்
இதிகாசங்கள்
இடித்துரைத்தும்
காதலி கசிந்து
உருகிக்கேட்டும்
திருந்தாத
திருந்தவே திருந்தாத
என் மனம்
என் குழந்தைச்செல்லம்
குற்றம் சுட்டி
அழகென
அதட்டி மிரட்டியதும்
ஞான மின்னல்கள் பல
புத்திக்குள் ஊடுருவி
ஆன்மாவின் அங்கங்களை உலுக்கி
என்னை முக்தியாக்கியதே!
ஏ இயற்கை பிரம்மமே
எங்கு போய்
வாழ்வியலின் சூத்திரத்தை
சூட்சுமமாய்
ஒளித்து வைத்தாய்.
சூத்திரத்தின் பாத்திரமாய்
உன்னையே எனக்குள்
முழுமுதலாய்
தெரிய வைத்தாய் !
தெளிய வைத்தாய் !!