Sep 27, 2014

வாழ்வியலின் சூத்திரம்




ஆசிரியர்கள் பலர் 
புத்தி சொல்லியும் 

நன்னெறி நூல்கள் 
நலம்பட உரைத்தும் 

நல்லோர் பலப்பல காலம் 
பகுத்தறிவூட்டியும் 

இதிகாசங்கள் 
இடித்துரைத்தும் 

காதலி கசிந்து 
உருகிக்கேட்டும் 

திருந்தாத 
திருந்தவே திருந்தாத 
என் மனம் 

என் குழந்தைச்செல்லம் 
குற்றம் சுட்டி 
அழகென 
அதட்டி  மிரட்டியதும் 

ஞான மின்னல்கள்  பல 
புத்திக்குள் ஊடுருவி 
ஆன்மாவின் அங்கங்களை உலுக்கி 
என்னை முக்தியாக்கியதே!

ஏ இயற்கை பிரம்மமே 
எங்கு போய் 
வாழ்வியலின் சூத்திரத்தை 
சூட்சுமமாய் 
ஒளித்து வைத்தாய். 

சூத்திரத்தின் பாத்திரமாய் 
உன்னையே எனக்குள் 
முழுமுதலாய் 
தெரிய வைத்தாய் !
தெளிய வைத்தாய் !!


நான் எழுதுவது கவிதை இல்லை!




சிந்தனைச் சத்தின்றி 
வெற்று 
வார்த்தை 
ஜாலங்கள் கொண்டு 

அடுக்கு மொழி 
சொற்றொடர்களால் 
கண்ணாமூச்சி நடத்தி 

கன்னியர் கவர 
அபத்தங்களால் 
தமிழை நிரப்பி 
தமிழைத் தரகு மொழியாக்கி 

போகப்பொருளாய் தமிழ் 
விற்றுப் போசிக்கும் 

கவிதை போன்ற ஒன்றை 
கவிதையே இல்லாத ஒன்றை 
கவிதையென படைத்தும் 
கவி கவி என சிலாகித்தும் 

திண்ணைப் பேச்சை 
திகட்ட திகட்ட இனிப்பூட்டி 
இலக்கிய கவிதையென  போற்றும் 

இப்பேதையர்தம் 
படைப்புக்கள்தான் 
தமிழ்கூறும்கவிதை என்றால் 
நான் எழுதுவது கவிதை இல்லை!
நான் கவிதை எழுதுவது இல்லை!!

தெரிந்தது புல்லளவு






நுண்ணியிர்கள் நாங்கள் 
எம் உலகு 
ஒரு பிரமாண்டமான 
நீர்க்கடல் - பனித்துளி 
என்று அதற்கொரு பெயரும் உண்டு.

எம் 
உலகமான பனித்துளி  
வீற்றிருப்பதோ 
நுனிப்புல் எனும் 
அண்டவெளியில் 

புல்வெளிதான்   
எம் பிரபஞ்ச வெளி 
யாமே இந்த ஜகத்தினை 
ஆட்சி செய்யும் 
உயரிய பிறவிகள்.

நுண்ணியிர்கள் நாங்கள் 
எம் உலகு 
ஒரு பிரமாண்டமான 
நீர்க்கடல் - பனித்துளி 
என்று அதற்கொரு பெயரும் உண்டு.

Sep 1, 2014

- பெரும்பூகம்பங்கள் -

என்றென்றோ 
பொங்கலுக்கும் 
தீபாவளிக்கும் 
 தவமாய்த்
தவமிருந்து பெற்ற  சொற்ப 
விடுமுறை 
மணித்துளிகளை 
சொந்த ஊரில் 
கொண்டு சேர்த்த கணத்தில் 
அங்கிங்கெனாதபடி 
எட்டுத்திக்கிலிருந்து 
பதுங்கிப்பாயும் 
பணத்தேவைகள் 
அப்பொக்கிச மணித்துளிகளை 
அப்படி அப்படியே  
கொள்ளையடித்த  
வன்கொடுமைகளைத்தான் 
என் மன தேசத்தில் 
இடையறா நிகழும்  
பெரும்பூகம்பங்கள் என்பேன்!
பெரும்பூகம்பங்கள் என்பேன்!

-

வேடிக்கை மனிதர்



எங்கோ
எங்கெங்கோ
தூரதேசங்களில்
துயரதேசங்களில்
உறவு துறந்து
சுற்றம் தவிர்த்து - செல்வம்
ஒன்றெ ஒற்றைத்
துணையென  - மாயைப்
பொருலுலகினைச்
சுற்றிச்சுழலும்
தேசநலம் அற்ற
தன்னலவாதிகளைப் 
பாரீர் பாரீர் என 
நித்தம் தூற்றித் திரியும்
பேதைகள் யாரென
உற்றுப் பார்த்தால் தெரியும்


தாம் பிறந்து
வளர்ந்து சுகித்த
மண்ணைவிட்டு
ஊருக்குதவாமல்
தொலைதூர
பெருநகரங்களில் - அதன்
காங்க்ரீட்காடுகளில்
மனிதம் மறந்து
மனம் பொசுங்கி
தன்னகமெங்கிலும் 
பொறாமை போற்றி 
உள்ளத்தனைய உயர்ந்தோரை 
தூற்றித்தூற்றித்
திரியும் சில
வேடிக்கை மனிதர்கள்தாம்
அவர்கள் என.

Oct 16, 2013

ஒரு பிரபஞ்சச்சுவராசியம்

மேகங்களை
துவைத்து து-வைத்து
மழையெனச்
சாறுபிழிந்து - பச்சிளம்
புவியதனனின் 
பசிதணித்து-வெளி
 எங்கெங்கினும் 
செழித்துயிர்த்திருக்கும்-பசுந்தாவரப்
 பாலகன்களுக்கு
சூரியத்தந்தையாய்-வெளிச்சப் 
பாலமுதம் ஊட்டி

தாவரங்கள்
பலகோடி
விலங்கினங்கள்
பலப்பல கோடி
புவியெங்கும் பூச்சியினங்கள்
பல்லாயிரம் கோடி
இவையனைத்தும்
உருக்கொடுத்து
அவ்விதமே
உருவெடுத்து - அதன் 
அங்கமெல்லாம்
உயிர்த்துவம் அளித்து






பிரபஞ்சத் துகள்களையும்
உய்ப்பித்து, அதன்
அணுவிற்கும் அணுவெனத் திகழ்ந்து
அண்டசராசரங்களையும் ஆட்டுவித்து
அயர்ந்திருந்த
ஒரு இறைத்த்த்துவத் தருணத்தில்














பிரபஞ்சத்
தொலைவெளிதனில்
வீச்சாய் விரவிப்
பரவியிருந்த-எம்
திக்கிலாச்சிந்தையில்
உதித்த
சுவராசியமான
சித்தம்.

எம் படைப்புச்
சுக்கல்களானசில
மானுட
மனங்களுக்குள் சில
சுவராசிய சு-தந்திரங்களை
விதைக்கும்
வித்தைதான் அது

எம் படைப்புகள்
எனையே
சப்த
ஸ்பரிச
ரூப
ரஸ
கந்தங்கள் மூலம்
உணர மறுக்கும்
விந்தைதான் அது.

இருளால்
வெளிச்சத்தின்
மேன்மை -இருளால்
வரையறுக்கப்படுகிறது

-
அதன்போல்
இறையதனின்
முழுமையை
நாத்திகம்
வரையறுக்கும்

இறையினைத் 
தொழும் ’இறை’ச்சல் 
எம் ஒரு
புள்ளியினை
பிரவசமாய்ப் 
பிரதிபலிக்கும் -அதனுள்ளே 
தம்உரு 
தொலைக்கும்
ஆயின் 
எமை
மறுத்துத்தூற்றும் 
நாத்திகச்சிந்தை 
எம் இறையையே
முழுமையாக்கும்- 
அங்ஙனமே
எம் அகப்பரிணாமத்தை
செழுமையுறச்செய்யும்.

ஆகவே
பிரபஞ்சத்திவலைகளாய் 
விரவி -அதனுள் 
ஆகிருதியாய் 
யுகயுகங்களாய் 
உறைந்திருந்திருந்த
இறைஎனும் 
இப்பேரண்டத்தையொத்த 
பேருண்மையை மறுக்கும்
நாத்திகமானுடங்களைப் 
படைப்பதென்பது-எமக்குள்
உயிர்த்துயரும் 
ஒரு 
பிரபஞ்சச்சுவராசியம்தான்!

Sep 5, 2013

பைந்தமிழ்ப் பயிர்த்து



புற்றீசல்போல்
பல்கிப்பல்கிப்பெருகிப் 
பரிணமிக்கும்
சில தமிழ்இலக்கிய 
வியாதிகள்!
விரசமாய் விடவித்துக்களை 
விதைக்கும் 
தமிழ்இலக்கிய 
வியாதிகள் - அவ்வாறே
சமீபத்திய வரவென
சில படைப்பாளிகள்
தமிழ்ச்சோலையில் 
எங்குகாணினும்
அவர்தம் எடுத்தவாந்திகள்!

ஆம், அங்கிங்கெனாதபடி
எங்கெங்கிலும்
வீர்யம் நீர்த்துப்போன
நொள்ளைச்சந்ததிகளாய்
சவலைக்குழந்தைகளாய்ப்பிறந்த
இதுகள்தான்
செந்தமிழ் அழிக்கும் 
சாத்தான்கள்.

அருந்தமிழ் மத்தினைத்துறந்து
சல்லிக்கற்களைக்கொண்டு 
தமிழ்ப்பாற்கடலிலிருந்து 
அமிர்தம்தனை கறந்திடத்துடிக்கும்
போலி இலக்கியநச்சினை 

நம் மனத்தினுள் 
புகுத்திடத்துடிக்கும் 
தமிழ்க்கொலைஞர்களின்
கலிகாலம் இது
அய்யகோ –
கலிகாலம் இது!

எம்மொழிச்சத்து - நீர்த்துப்போய்
தமிழ்தம் வீர்யம்
குறைகுறையென
குறையாதிருக்க
அருந்தமிழ்ச்சூல் தரித்
நற்றமிழ் இலக்கியங்கள் –
தமிழ்அகமெங்கிலும் 
பிறக்கக்கடவதாக!

அங்கனமே
தமிழ்கூறும் யுகமெங்கிலும்-
செவ்வனே இப்பைந்தமிழைப்
பயிர்த்திருப்பதாக! பயிர்த்திருப்பதாக!!
நம்மனச்செழுமைஏற்றும்
தமிழ்ப்படைப்பாளிகள் - அவர்தம்படைப்புக்கள்
இம்மானுடம் உள்ளவரை
உயிர்த்திருப்பதாக! உயிர்த்திருப்பதாக!!

Mar 4, 2012

முதல் புன்னகை :)



கி.பி. 3150


செயற்கையான நித்தரையில் தூக்கக்கட்டுப்பாட்டு கேந்திரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஷ்யாமினை, ஞாபகக் கணினியின் சிலிக்கான் மூளை, இயந்திர இலக்கணப் பிசிறு சிறிதும் தவறாமல் தட்டி எழுப்பியது.

"காலை வணக்கம் ஷ்யாம். உங்களுடைய ஐந்து மணி நேர தூக்கம் இந்த நிமிடத்தில் முடிவடைகிறது. மூச்சு, இதயத்துடிப்பு, மற்ற அனைத்து உடலியக்கங்களும் ஆரோக்கியமாக உள்ளது"

தூக்க அயர்ச்சி தேகமெங்கும் அங்கிங்கெனாதபடி விரவி இருக்க, ஷ்யாம் மெதுவென முழித்துப் பார்த்தான். லேசான பசி. இன்றைக்காவது திட உணவு கிடைக்குமா?

இயந்திரத்தனத்துடன் எழுந்து எலெக்ட்ரோ பிரெஷ்சினை வாயில் மூன்று நொடிகள் வைத்தான். பற்கள் சுத்தமாகி விட்டன. மைக்ரோ ஸ்டீம் குளியல் ஒரு நிமிடம். எல்லாம் கணினி நிர்ணயித்த படி.

குளியல் முடித்து பட்டனை அழுத்த சமையலறை அவன் பக்கம் நகர்ந்து வந்தது. ஷ்யாம் சமையல் இயந்திரத்தினை பசியுடன் அழைத்தான்.

ஈரோ! இன்றைக்காவது தயவு செய்து எனக்கு இயற்கையான உணவு ஏதாவது கொடுப்பாயா. மாத்திரைகள் எனக்கு அழுப்பாக உள்ளன.

ஈரோ, மின்னுயிர்த்தெழுந்து தன் ஞாபகச் சில்லுகளை அவசரத்தனமாக நிரடிப் பார்த்த பின்  கரகரத்தது....
"மன்னிக்கவும்!... உறக்கத்தில் ஏற்கனவே திரவச் சத்து உடம்பினுள் செலுத்தப்பட்டு விட்டன, மேற்படி இன்றைக்கு சில புரோட்டீன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர் மாத்திரைகளுக்கும் இப்போது தட்டுப்பாடு...... அயல்கிரக தண்ணீர் உபயோகப்படுத்துவதில் இன்னும் தடை நீடிக்கிறது."

சலிப்பு மேலிட ஷ்யாம் கெஞ்சிப் பார்த்தான். "அடுத்த மாத இயற்கை உணவினை இன்றைக்கு சாப்பிட முடியாதா ?"



"ஷ்யாம் இந்த மாத இயற்கை உணவு ஏற்கனவே அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. போன முறை போல என்னால் தலைமைக் கணினியிடம் வாங்கிக்கட்டிக் கொள்ள முடியாது. இப்போதெல்லாம் விதிகள் சற்றுக் கடுமையாகவே உள்ளது. உனக்கே தெரியும் நான் கட்டுப்பாட்டுக் கணினியாக பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இந்த தடவை சலுகை அளிக்க முடியாது"

பேசாமல் இந்தப்பூமியை விட்டுவிட்டு அப்பா இருக்கும் அயல் கிரகத்திற்கு சென்று நிம்மதியாக வாழ வேண்டியதுதான். முனகலுடன் மாத்திரைகளை எடுத்து முழுங்கினான். இந்த ஜெல்லி இல்லாமல் தண்ணீருடன் குடித்திருந்தால் கொஞ்சம் புத்துர்ச்சியாவது கிடைத்திருக்கும்.

பட்டனை அழுத்த, சமையலறை அகன்றது - பின் படிப்பறை நகர்ந்து வந்து அவனை உள்வாங்கிக் கொண்டது.

ஷ்யாமின் விர்சுவல் எண்ணங்கள் கல்லூரிக் கணினியை தொலைகட்டுப்பாட்டின் மூலம் மின்னுயிர்ப்பிக்க, அது அன்றாடச் செய்திகளை மானிட்டரில் துப்பியது.

"........முக்கிய மனிதர்களின் ஆயுளை 600 ஆண்டுகளிலிருந்துருந்து 700 ஆண்டுகளாக ஆக மாற்ற கணினித் தலைமையகம் உத்தேசம்: இது கணினிச்செயலரங்கத்தில் பணியாற்றி வரும் தலைசிறந்த மனிதர்களுக்கு மட்டும் பொருந்தும்..........!"

"...வேற்று கிரகங்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கல் தொடர்கிறது.
சென்ற தலைமுறையிலிருந்து கடலுக்கடியில் வசிக்கும் மக்களுக்கு தேர்தலில் முன்னுரிமை, நிலவாழ் மக்கள் எதிர்ப்பு........"

".................செவ்வாய் கிரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளின் விலை பூமியில் பன்மடங்கு விலையேற்றம்......"

"...........கடவுள் உண்டா இல்லையா? விவாதம் இன்றும் தொடர்கிறது......"

"........மனிதர்களை முற்றிலும் பூமியிலிருந்து துரத்தி விடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை, மனிதர்களின் உரிமைகள் எப்போதும் மதிக்கப்படும் - தலைமைச் செயலக கணினியின் ஆறுதல் செய்தி..............."

"..............ப்ளூடோ கிரகத்திற்கு பூமியிலிருந்து பயண நேரம் 5 மணி நேரம்  - பயணிகள் அவதி. 4 மணி நேரமாக்க கோரிக்கை............."

"...........எந்திரங்களைத் திருமணம் செய்யும் மனிதர்களுக்கு பதவி உயர்வு சலுகை.............."


"......கணிணியில்லாமல் இரண்டு மணிநேரங்கள்: ஓம் சந்தோஷ பகவான் மீண்டும் சாதனை....."

ப்ச்!....சுவராசியம் இல்லாச் செய்திகள். செய்திகளைத் தவிர்த்து கல்லூரிப் பாடப் பிரிவிற்குத் தாவினான்.

"அரிஸ்டாட்டில், ஏதாவது கொஞ்சம் சுவராசியமான பாடத்தை இன்றைக்கு கற்பித்துத் தா!"

அவனுடைய ஆசிரியக் கணினி அரிஸ்டாட்டில், சந்தோசச் சிலிர்ப்புகளுடன்  அருகே வந்து, "ஷ்யாம், வரலாறுகளைத் திரும்பப் புரட்டலாமா? உனக்குத் தொழில் நுட்பப் பாடங்களை விட வரலாறு இந்த நேரத்துக்குப் பிடித்தமாக இருக்கும்."

ம்ம்ம், அதிலே ஏதாவது வாழ்க்கை முறை போன்ற ஏதாவது படிக்கலாம். கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கலாமா ?

2100 -ல் எப்படி இருந்தது என்று பார்க்கலாமா ?

ம்ஹூம், இன்னும் கொஞ்சம் பின்னாடி போகலாம் அரிஸ்டாட்டில்!

2010 ?

அதுவே பரவாயில்லை...முக்கியமா அந்தக்கால கல்வி முறையிலிருந்து பார்க்கலாம்.

ஷ்யாம் அதைப்பத்தி இன்னைக்கு ரெம்ப நேரம் படிக்க முடியாது. ஏன்னா நேரடியாக கல்லூரி சென்று உன்னுடைய பாடக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒ அது இன்னைக்குத்தானா... கொஞ்ச நேரம் பாடம் படிச்சுட்டு நான் கிளம்புரேனே?

சரி சரி, நான் பாடத்தை வழக்கம் போல வாசிச்சுக் காட்டுவேன், உனக்கு சந்தேகம் வர்றப்ப கேள்வி கேக்கலாம். அப்பதான் உனக்குப் புரியும்.

சரி..ஆரம்பி.

2010ல இப்போ இருக்கிற என்னை மாதிரி கணினி எல்லாம் அப்போ பிறக்கல்ல. இப்போ இருக்கிற எந்தவிதமான எந்திரங்களும் உருவாகாத காலம். மனிதர்களே இந்தப் பூமியை முழுக்க ஆக்கிரமிப்பு செஞ்சிருந்தாங்க.

ஆச்சரியமா இருக்கே. 

அப்ப உன்ன மாதிரி கணினி வாத்தியார் கூட இல்லையா..

அந்தக்கால இயந்திரங்கள் எல்லாம் பொம்மை மாதிரி. அதுகளுக்கு என்னளவு அறிவெல்லாம் கிடையாது.

அப்போ யாரு பாடம் சொல்லித்தந்தாங்க

சொன்னா ஆச்சிரியமா இருக்கும். மனுசங்க தான் வாத்தியார்.

அப்போ ஒவ்வொரு மாணவனுக்கு வீட்டிலே வாத்தியார்தான் கத்துத் தருவாரா?

அந்தக் காலத்துல இப்போ மாதிரி வீட்டிலே படிக்கிறது இல்ல. முழுக்க முழுக்க பள்ளி, கல்லூரி போயி தான் படிக்கணும். இப்ப நீ போற மாதிரி  கல்லூரி வெறுமனே வருசத்துக்கு ஒரு தடவ மட்டும் வந்து கட்டுரை சமர்ப்பிக்கிற இடம் இல்ல, மாணவர்களே தினமும் கலகலப்பாக ஒன்னு சேர்ந்து படிக்கிற இடமா இருந்திருக்கு.

ரெம்ப சுவராசியமான தகவல். அது சரி மத்த கிரகங்கள்ளேயும் மனுசங்களுக்கு இந்த மாதிரி நிலைமை தானா ?

அத சொல்ல மறந்துட்டேனே. அந்தக் காலத்துல மனுசங்க பூமியில் மட்டும் தான் இருந்திருக்காங்க.
நீ நினைக்கிற மாதிரி மத்த கிரகங்கள்ள மனுசங்க இருந்ததே இல்ல, சில நூற்றாண்டுகளுக்கு முன்ன இங்கிருந்து சில காரணங்களுக்காக போனவங்கதான். முக்கியமா, எங்களைப் போல இருக்கிற இயந்திரங்களின் ஆதிக்கம் பிடிக்காம அங்க குடியேறி போனது ரெம்ப காலமா நடக்குற விஷயம் தெரியுமா.

நம்பவே முடியல்லையே.

இன்னொரு விஷயம் சொன்னா அதவிட ஆச்சிரியப்படுவே

சொல்லு அரிஸ்டாட்டில், சுவராசிய மிதப்பில் ஷ்யாம்.

இப்ப பூமியில வசிக்கிற மீதி மனுசங்களும் சுத்தமான மனுஷ வகை கிடையாது. எல்லாம் கொஞ்சம் மரபணுக் கலப்படத்துல இயந்திரங்களுக்கு சாதகமா எண்ணங்கள் கொண்ட மனுசங்க தான்.

இவ்வளவு பிரச்சினை உன்ன மாதிரி இயந்திரங்கள் ஏன் பண்ணனும்?

ரெம்ப எளிய காரணம், எந்திரங்கள் என்னதான் பல மடங்கு சக்தி வாய்ந்து இருந்தாலும் மனுசங்க மேல இருக்குற பயம் இயந்திரங்களுக்கு இன்னும் போகலன்னே வச்சுக்கலாம்...... சரி சரி...ஷ்யாம் நீ கல்லூரி கிளம்புற நேரம் வந்திருச்சு.

இன்னும் கொஞ்சம் படிக்கலாமே. இந்த மாதிரி பழைய கால வரலாற்றக் கேட்டுட்டு கிளம்பிப் போகவே எனக்கு மனசில்ல...

ஷ்யாம், அதுக்கெல்லாம் ரெம்ப நேரமாயிரும். இப்பவே கிளம்பு.

மனது அங்கேயே உறைந்திருக்க மெதுவென கிளம்பினான்.


.............

போக்குவரத்துக் கேந்திரத்தினுள் நுழைவதற்கு முன் அவன் உடையின், முடியின் நிறத்தினை மாற்றியது அவனுடைய செயலக எந்திரம். 
வெளியே வந்தால் செயற்கையான ஆக்சிஜன் சரேலென முகத்தைத் தாக்கியது.


போக்குவரத்துக் கேந்திரத்தில் பெரும்பாலும் இயந்திரங்களே - மனிதத்தன்மையினை ஒத்த பாவனையுடன்.

மனிதர்கள் சிலர் இயந்திரங்களாக ஆங்காங்கே சிதறலாக இருக்கையில் புதைந்து கிடந்தனர்.

ஷ்யாமும் இருக்கையொன்றில் புதைந்தான். 

....உங்கள் மனித எண்ணினைக் கூறுங்கள்....
பரிசோதனை இயந்திரம் லேசர்க் கண்களை பல கோணங்களில் உருட்டியபடி.

இதையெல்லாம் எவன்  ஞாபகம் வச்சுக்கிறது..ம்ஹ்ம்...ஷ்யாம் தன் வீட்டிலுள்ள அலுவலகக் கணினியை தொலையுணர்வு மூலம் இயக்கி தன் மனித எண்ணினை கேட்டு லேசர்க் கண்ணனிடம் செப்பினான்.

"சோம்பேறி மனிதர்கள்", பரிசோதனை இயந்திரம் இகழ்ச்சியுடன் முணுமுணுத்ததைத் தவிர்த்து சன்னலில் பார்வையை வீசினான்.

வாகனம் நகர்த்தலின் அறிகுறி சற்றுமின்றி இருந்தாலும் மின்னலைப் போன்ற வேகத்தில் பயணிப்பது அருகிலிருந்த திரையில் மிளிர்ந்தது. மணிக்கு ஐந்தாயிரம் கிலோமீட்டர்கள்.

இயந்திரங்களின் உலோகஸ்பரிசங்களின் சத்தம், உயிர் வரை ஊடுருவது போல் இருந்தது. சே! எங்கு போனாலும் இதுகள் தானா...சலிப்பு சுள்ளென்று தாக்க, ஆயாசத்துடன் பெருமூச்செறியும் முன்னே கல்லூரி நிறுத்தம் வந்தது.

இறங்கி நடந்தான். 

...........................


கல்லூரி முன்னிருந்த வளாகங்களில் இரு புறங்களில் குழ்ந்தை மையங்கள். அங்கு என்னை நடப்பது என்பது போன முறை கல்லூரிக்கு வந்த போதுதான் ஷ்யாமிற்கு தெரிய வந்தது.
மனிதக் குழந்தைகளுக்கு உணர்வுகளை மற்றும் மொழிகளைச் சொல்லித் தரும் மையம் அது. தமிழ் போன்ற மிச்சம் மீதியில்லாமல் வழக்கொழிந்த  மொழிகள் இங்கு கணினிகளால் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம்.  ம்ஹ்ம்...தமிழர்களும் அவர்களின்  தன்மொழிக் கொலைகளும்......'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில்........'

மேலும் மனிதமொழி தவிர, மனிதர்களாக வாழ்வது எப்பிடி,  எப்படி சிரிப்பது,   மற்றும் இயந்திரங்களுடன் பழகுவது எப்படி, என்று குழந்தைகளுக்கு வாழ்க்கை முறை பற்றி சொல்லிக் கொடுப்பது அங்கேதான். 

ஷ்யாம்னுடைய அப்பா, சோதனைக்குழாயில் அம்மா யாருமின்றி கருத்தறிந்து, இயந்திரப்புரட்சியின் போது ஷ்யாமினை இங்கே விட்டு விட்டு  வேற்று கிரகத்திற்கு தப்பித்து சென்றதாக  ஈரோ  ரகசியமாகச் சொன்னது ஞாபக மேகமாக நினைவினில் வந்து சென்றது.


.....

இப்போது கல்லூரியின் உள்ளே ஷ்யாம். அவனால்  பழங்கால வரலாற்றின் வாழ்க்கை முறை தன் நினைவுகளில் சிந்திச் சிதறுவதை தடுக்க முடியவில்லை....இது போன்ற இடங்கள் தான் அக்காலத்தில் தூதுகலமாய் மாணவர்கள் கல்வி கற்றார்களா...இப்போது வெறும் ஜடமான எந்திரங்கள் அளாவளாவும் பிரதேசமாகிப் போனதே....

தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை நேரிடையாக கல்லூரி பேராசிரியக்  கணினியிடம்  கொடுத்து அதனுடன் கலந்தாராய்ந்து விட்டு திரும்பினான்.

அந்த நாளே யுகமாகிப் போனது போன்ற அயர்ச்சி.

...........................



இல்லம் திரும்பியவுடன் ஈரோ முக்கியமான செய்தியை தாங்கியபடி காத்திருந்தது. 

"...........ஷ்யாம் கோடை விடுமுறைக்கு பிரபஞ்சத்தின் இன்னொரு கேலக்சியில் உள்ள உன்னுடைய அப்பாவினைச் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது!........"

சந்தோசம் சரேலென தாக்கியது போல உணர்ந்தான். மூளை எங்கிலும் சந்தோசத்தின் ஆர்ப்பரிப்பு. நெடு நாள் கனவு. 

அவன் அப்பா வாழுமிடம் இயந்திர-மனித போராட்டங்களின் போது பூமியை விட்டு வெளியேற்றப்பட்ட மனிதர்கள் உருவாக்கிய கனவு தேசம்-மனிதர்கள் முழுக்கட்டுப்பாட்டில் இயந்திரங்கள்-

மனிதத்தன்மை மேலோங்கிடும் வாழ்க்கை-
இயற்கையான உணவு-
இயற்கையான நீர்-
சுத்தமான ஆக்சிஜன்- 
மனிதர்களுடன் அளாவளாவும் ஆனந்த தருணங்கள்-
கிட்டத்தட்ட அக்கால பூமியைப் போன்ற வாழ்க்கை முறை - 
-- ஆகா என்ன ஒரு கனவு வாழ்க்கை.


மறுபடியும் அரிஸ்டாட்டில்டம் வந்து அந்தக் கிரகத்தின் வாழ்க்கை முறையைப் பற்றி திரும்பத் திரும்பத் தெரிந்து கொண்டான். 


மிதப்பினில் இருந்த ஷ்யாம் தூக்கக் கேந்திரத்தின் உதவியின்றி அங்கேயே தூங்கிப்போனான். அரிதான இயற்கை தூக்கம்.
தூக்கத்தில் ஷ்யாம் கனவு காண்கிறான்........ 
அவன் இருபதாம் நூற்றாண்டுகளில் இருப்பது போல, 
எங்கு காணினும் இயற்கை.
பசுமையான மரங்கள், 
சுத்தமான பிராண வாயு. 
பெட்டிப் பாம்பாய் எந்திரங்கள் - வெகு அரிதாக 
மாத்திரைகளில் சுருக்கப்படாத இயல்பு மாற உணவு. 
இயந்திரத்தனம் கலவா மனிதர்கள்.

கனவுலகில் சஞ்சரிக்கிறான். 
கனவு தந்த அந்தத் தூதுகலத்தில் ஷ்யாமின் முகம் தூக்கத்திலும் அழகெனப் புன்னகைக்கிறது. 
புன்னகை அவன் வாழ்நாளின் முழுமுதல் புன்னகை. உயிரிலிருந்து ஆன்மா வரை இரண்டறக் கலந்த -

முதல்  புன்னகை


முற்றும்.