May 1, 2019

'அ' வில் உதித்து 'ஃ' ல் உருப்பெற்ற எம்தமிழே!

வனி, அனைத்துலகு, அண்டமெங்கிலும் மூத்தமொழியென உதித்தெழுந்து - பின் 
றுமுக வல்லின, இடையின,  ஆரணங்குகளாய்ச் செழித்த
ன்தமிழே இசைத்தமிழே, இன்னிசையே, இறைவா மொழியே - உன் 
ராறு உயிரெழுத்தால் மூவாறு மெய் கொண்டு என்னுள் இசைந்திருந்து 
யிர்மெய்யென பாகுப்பாடின்றி, களமாடி, கவிபாடி, களவாடி, 
ம்தம் அங்கத்தின்  அணுவரை ஊடுருவி ஈர்த்தெம்மை ஆட்க்கொண்ட அருங்காப்பியமே, பேரின்பக்கடலே! 
ட்டுத்திக்கிலும் ஏழுகடல்சூழ் புவிதனில்  அங்கிங்கெனாதபடி பீடுற்றிப் பரவி 
ழிசைத் தமிழென இவ்வையகத்தே வான் புகழ் கொண்ட தனித்தமிழே! 
யமில்லை நீ தன்னிகரில்லாப் பெட்டகமே, தெள்ளிய அமுதே, திகட்டாத தேன் சுவையே! 
ப்பிலா அணிகலனே, ஒளிகுன்றா சுடர்நுதலே, ஓங்கார இசையழகே! 
ராயிரம் சூரியன்கள் ஒன்றெனவே உதித்திடுமே - ஒய்யார மொழிநடை காண 
தெனவே நற்றமிழாய் நானிலத்தில் என்றென்றும் வாழிய வாழிய வாழியவே!! 

Apr 19, 2019

தமிழர் திருநாளாம் பொங்கல் - அன்றும் இன்றும் என்றும்!





சங்கக்காப்பியங்கள் மங்காக் களிப்புடன் கூற்றுவது யாதெனக்காணீர்
தைஇத் திங்கள் தண்கயம் போல்என புறநானூறுபுகழ்ந் துரைத்ததும்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்என நற்றிணை நவின்றதும்  
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்என குறுந்தொகை குறிப்பறிந்ததும் 
தையினீ ராடிய தவந்தலைப் படுவயோயென கலித்தொகை கவிபாடியதும்

யாதொன்றைக் கட்டியம் கூற்றுகின்றன எனக்காணீர்!

வெய்யோனவன் வடக்கே வலம் பெயர்வதை வானியலறிவால் கணித்து
பெய்யெனப்பெய்த்த பொய்யாத மாமழைப் பருவங்களையுணர்ந்து
வையத்தையே வளம்செழிக்க வாழ்வாங்கு வாழவைத்த இயற்கையை
தைத்திங்களில் வழிபட்டு வணங்கி விண்ணிற்கும், மண்ணிற்கும், உழவிற்கும்
உழுத கால்நடைகளுக்கும் நன்றி நவிழும் அறிவியல்சார் நாகரீகம்தனை
உலகிற்கே எடுத்தியம்பியது தைப்பொங்கல் கண்ட தொல்தமிழேயெனக்
கவின்மிகு காப்பியங்கள் கட்டியம் கூற்றுவது காணீர்!

புவியெங்கும் புகழ்மணந்த பூம்புகாரில்
இந்திர விழாவெனஇத் தைத்திருநாளை
முக்காலமும் முரசறைந்துத்
திக்கெங்கிலும் தொங்கும் தோரணத்தால்
திருவிழாக்கோலம் தரித்து
கவிபாடி களமாடி - நம்மனதினைக்
களவாடிக் களிப்புற்றதைச்
சீர்மிகு சிலப்பதிகாரத்தின்வழி நாம்
காண்பதுமித் தைப்பொங்கலே!

கீழடியில் கண்டெடுத்த சுட்டபானை
உத்திரமேரூரின்  உயரிய கல்வெட்டு
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள்
கொற்கையின் தமிழ்த்தொன்மங்கள்
புதையுண்ட பூம்புகாரின் பொக்கிடங்கள்
இவையனைத்தும் இசைபட இயம்புவது
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
ஈர்த்தெம்மை ஆட்கொண்ட
அருந்தமிழணங்கின் கலாச்சாரச்
சின்னங்கள் அல்லவா -  அக்கலாச்சாரத்தில்
அன்றே ஆங்கே சித்தமெலாம் சிறந்திருந்தது
தைப்பொங்கல்  போற்றிடும் பைந்தமிழ்ப்
பண்பாட்டிலக்கியங்கள் அல்லவா?

கூர் கொண்டதன் கொடுங்கொம்பு சிலுப்பி
வீறுகொண்டு ஏறு காடுகொள்ளாது
சீறிச்சினந்து வீரமறவனைக் - கொம்பால்
கீறி உழுது அவன் குருதி கண்டிடுமுன்
வீழ்ச்சி காணா வீரனவன்தோள் தினவெடுக்க
ஏற்றினின் எழுச்சிதனை அச்சம் மிச்சமின்றி
அடக்கியாளும் ஆண்மகனையே ஆட்கொண்டு - தம்
காதலையும் வீரத்தையும் கடைக்கண்ணாலே
விதைத்திடும் வஞ்சியர்கள் வாழ்த்தி வாழ்த்தி
வரவேற்றிடும் பொங்கலே தைப்பொங்கல்!

அண்டை அந்நியரிடத்தில் ஆண்டுகள்பல
அடிமைத்தளையில் அழற்றிக்கிடந்தாலும்
பாட்டன் முப்பாட்டன் எந்தையும்
தமிழ்மூச்சு தணியாது தமிழ்ச்செருக்குடன்
பொங்குபல கலைகளுடன் - இவ்வையகத்தே
வான்புகழ் கொண்டு செந்தமிழ்தனின்
செழுமிகு நாகரீகத்தைப் பல்லாண்டு
பொங்கலாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்

அய்யகோ இன்றோயிங்கு திக்குத்தெரியாது
தன்சுய மறியாது ஆண்டாண்டுகளாய்
கிடந்து தொலைந்த இத்தலைமுறை
நித்திரையிலிருந்து அவ்வப்போது
அரைகுறையாய் விழிப்பதால்
உழவும் உயிர்வாட உழன்று கிடக்கிறது
கலாச்சாரங்கள் கேட்ப்பாரற்று கிடக்கிறது
பைந்தமிழ் பண்பாட்டுப்பயிர் வாடி வதைகிறது
பால்கெட்டு பொங்காத பொங்கலாய் - வாழ்(வு)
வளங்கெட்டு பொசுங்கிக் கிடக்கிறது

பைந்தமிழின் பொங்குபல காப்பியங்கள்
புவியெங்கும் போற்றிப் புகழ்ப்பாடிய
காலங்கள் மறைந்தாலும்
செந்தமிழின் சீர்சிறப்பினை தமிழர்பலர்
தன்னிலையற்றுத் துறந்தாலும்
முந்தைக்குமுந் தையதாய் விளைந்து
பிந்தைக்குபிந் தையதாய் செழிந்து
அன்றும் இன்றும் என்றுமே
விளங்கிடும் அருந்தமிழை
அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு
கொணர்ந்து சேர்க்க உறுதி பூணுவோமே!

அன்றும் இன்றும் என்றும் - தீஞ்சுடர்
மங்காச்சூரியன் போல் பூவுலகில்
 காற்றுள்ள வரை
தமிழ்ப்பண்பாட்டை என்றென்றும்
தலைசிறக்கச் செய்குவோமே!
பொங்குக பைந்தமிழ் பொங்குக நற்றமிழ்!
பொங்கலோ பொங்கல்!!


.செ.
(முனைவர் . செந்தில்குமாரன்

Jan 23, 2016

உன்னுள்





கல்லில் கிடந்ததை கருத்தினில்  ஏற்றினாய் 

உள்ளில் கிடந்ததை மறுத்தே தூற்றினாய் 

காயத்தினுள் சூத்திரமிருக்க, மாயத்தினுள் தரித்திரம் கொண்டாய் 

பாற்கடல் பருகக்கிடக்க, சேற்றுக்கடல் அருந்திடத்துடித்தாய் 

மேகமது பொழிந்திருக்க, தாகத்துடன் தனித்திருந்தாய் 

சூரியனே உதித்திருக்க விளக்கதனை தேடியலைந்தாய்

மெய்ஞானம் உணராமல் பொய்ஞானம் ஏற்றித்தொழுதாய்

உன்னுள் தொலைத்தபின் விண்ணில் எப்படி தேடிப்பிடிப்பாய் ?!







**************************************

Jan 1, 2016

பிதற்றுதே எனதுளமே!


















வெற்றுப் புலனைந்துகொண்டு 

பற்றும்பொருள் 

பலவற்றை - நோயெனத் 

தொற்றும் எனதுளமே 

கற்ற செருக்கொண்டு

உற்ற நிலைநோக்கின்  -இதுகாறும்  

பெற்றதனைத்தும் 

குற்றமுற்ற பொருளுலகே! 

நெஞ்சத்தக இருளகற்றும்  

மாசற்ற 

பரம்பொருள்தன்னை - நித்தம் 

பற்றற்றுச்  சுற்றிட

திக்கற்றுப் 

பிதற்றுதே எனதுளமே!





*******************

Dec 31, 2015

தேநீர்க்கடலில் ஒரு கரண்டித் துடுப்பு





அய்யகோ 

ஒரு தேநீர்க்கடலே 

சுனாமியாய்ச் - சிந்திக் 

கிடக்கிறதே!

தேநீர்க்கோப்பையில் 

கரண்டித்துடுப்பு போட்டது - என்

பிரளயத் தவறே!





***************************

பாவம் இம்மானிடம்

.

.


உள்நோக்கா  

திக்கெங்கிலும் -

வெளிவெளி நோக்கியே - பிறவி 

பலபல கடந்து 

அழன்று கிடந்து இழிந்து 

இச்சை தீர்ப்பதுவாய்

புசித்துப்பின் 

பசித்துத் திரிந்ததுவே 

பாவம் 

இம்மானிடமே! 








-------------

Dec 30, 2015

வெளியெங்கும் ஒளிதேடும்








நிலக்கரி மானிடர்கள்  நாங்கள்  - அக

ஒளி தொலைத்த   

நிலக்கரி மானிடர்கள்  நாங்கள் 


வெளியெங்கும் ஒளிதேடும் 

மானிடர்கள் நாங்கள் 

ஒளி உமிழும் வைரம்   

எமக்குள் இருப்பதறியா 

அறியாது -  பிறவிகள்பல  

வெளியெங்கும் ஒளிதேடும் 

பேதை மானிடர்கள்  நாங்கள்.


Dec 29, 2015

மனிதம்




அய்யகோ 

பொங்கிய 

மழைவெள்ளம் வற்றப்போகிறதே

கூடவே மனிதநேயம்!




****************************************


Jan 17, 2015

வாந்தி 



ஏ மானுடா

நீ 

ருசித்து

புசிக்கும் தேன் 

தேனீயாம் 

யாம்  மகரந்தமாக உண்டு 

தேனாகக் கக்கிய 

வாந்தி 

என்ற பேருண்மையை 

உணரக்கடவதாக!

பேதையென ஒரு பெண்மேகம்  




ஓ மேகமே 


நீயொரு 


பேதைப்பெண்தான் 

புகுந்த வானவீட்டில் 

மின்னல் சாட்டைகளால் 

நிதம்தோறும் வதைபட்டு 

மழையெனக்கண்ணீர் வடித்து 

கோபம் கொண்டு 

பிறந்த பூமி வீட்டிற்கு வந்தாலும்  
சூரியக் கணவன்

சுட்டெரித்து அழைத்த கணத்தில் 

பழையன மறந்து

காற்றில் பறந்து

வான வீட்டிற்கு 

சென்று விடுகிறாயே

ஓ மேகமே 

நீயும் ஒரு பேதைப் பெண்தான்!






*******************************